Thursday, 25 February 2010

கொக்குவில் கை ஒழுங்கையில் எனது கால் தடங்கள்

ஒவ்வொரு இரவுகளும்
பேய்களும் முனிகளும்
தின்று விட்ட
இலைகளும் மரங்களும்
மாசிப்பனியில்
தோய்ந்து போய் நிற்கும்
ஈரலிப்பான எல்லாமே

இலைகளுக்கு கீழே
பதுங்கி இருக்கும் பனி நுரைகளை
காலைகளில் கண்டு பயந்ததும்
மாலையில் விட்டு வந்த
மரங்களும் செடிகளும்
மறுநாளும் அங்கேயே
நிற்பதை காண்பது
ஒரு மன நிறைவும் துணிவும்

மாமரத்தில் புல்லாங்குழல் ஊதி
கண்ணன் என்று நக்கல் அடிக்க பட்டதும்

பிளேன் போல பறந்து
இரும்பு படலையில்
நெத்தி அடிக்க ரத்தம் சிந்தியதும்

மீன் வாங்கும் பொழுதுகள்
கீரைக் கட்டு கொண்டு வரும் அப்பா
வல்லாரை அரைச்சு தந்து
மூளைக்கு வளர்ச்சி தந்த சித்தி

காட்டு வாழ்வு வளர்ந்தாலும்
பாடசாலை மட்டும்
உன்னி உன்னி உதைந்து தள்ளி
ஒரு உன்னதமான தோணியில்
ஏற்றிவிட்ட என் நவரத்தினராசா டீச்சர்,
(எனக்கு வேறை யாரையும் தெரியாது
எப்படி நான் இந்துக் கல்லூரி
அனுமதியில் சித்தியடைந்தேன் என்று சொல்லி காட்டுவதற்கு ..)

வீட்டு பசு சாந்தி
கறந்த பாலில் அம்மா
உருவகப்படுத்திய சாந்தி,
அவளது பையன்
அவனது குறும்பு துள்ளல்
அவனுடனான மேய்ச்சல்
தீபாவளிக்கு ஒரு
இறைச்சிக்கடைக்கு விற்கப்பட்ட
அந்த அவனது கடைசி பார்வை
எல்லாமே என்னுள்
இன்றும் இன்றும்
கண்ணீரோடு வாழ்கின்றன

பகலில் எருது போல உழுது வந்த புழுதிகளும்
இரவில் கைவிளக்கில் தெளிவில்லாது தெரிந்த புத்தக பாடங்களும்
காலை நேர தேநீர்
மதியத்துக்கான பிடுங்குபாடுகளில்
அவரவர் வீடுகளில்
கலகக்க
சுட்டிப் பையன் தாவீது
என்ற ஒரு கதா பாத்திரத்தின்
inspiration உடன் கையில் கற்களுடன்
பக்கத்து பனை வளவுக்குள் எறிந்த கற்கள்

மைனாக்கள் மேயும்
பின்னாளி வளவுக்குள்
பதுங்கி பதுங்கி
கண்ணை மூடி
பால் குடித்த பூனையாக
நிஜமாகவே மைனாவுக்கு
மிக அருகில் ..
அந்த மைனாவுக்கு தெரிந்திருக்கும்
நான் ஒரு குழந்தை என்று
அதுவும் பக்கத்திலேயே நின்றது
முதல் தொடுகை போல
முயலும் போதே பறந்து விட்டது

தூக்கணாங் குருவிக் கூடுகளும்
கள்ளன் போலீஸ் விளையாட்டுகளும்

ஆர்ப்பரித்து அடங்கி போய்
ஒரு ஊமை மனைவியுடன்
வாழ்வில் ஒதுங்கி வந்திருந்த
ஒரு அயலவருடன் அவமதிப்பு செய்ததும்
அவர் அமைதி காத்து சென்றதும்

அந்த அடங்கா ஆணவமும்..
இன்றைய இருபது வருட
வளர்ச்சின் உச்சத்தில் தெரிகிறார்
எனக்கு ஒரு தோழனாக
அந்த மண்ணின் மைந்தன்

அவர் வளர்த்த கால்நடைகளும்
அவர் செருக்கிய புல்லுக் கட்டுகளும்
இப்போது ..
ஒரு அமைதியான வாழ்கையை
அருகில் இருந்து தான் தொலைத்து
இருப்பதை கண்களில் காட்டுகின்றன
ஈரமான நினைவுகளாக