காற்று துளைக்காத
ஜன்னல் வழி
புயலாக வீசும்
உனது காதல் மந்திர வேள்வியின்
உக்கிரத்தில் நீ
ஆடிக் கொண்ட தாண்டவம்
அலறியடித்தபடி கண்ணெதிரே
சிதறி விழும்
இலத்திரன்களின்
உதிரம் உன்
கடும் நரபலி வேள்விக்கு
நாயகன் தேடுவதை
உரைத்து மாண்டன
காதலில் பிரிதல் ஒரு போர்க்களம் சேர்தல் ஒரு ஊடறுப்பு
வல்லவன் விட்டு நீங்கிய வேளைகள் வளர்த்தன விரகத் தீயை
வாட்டுவது நானாயினும் வாடுவது நீயல்லவோ
கையில் மன்மத பாணத்துடன்
ஏகினேன் கானகத்தில்
நீ வைத்திருந்து
கசக்கி கிழித்துப் போட்ட
மந்திரப் பொம்மையாக
கிழிந்து செல்கின்றன கால்கள்
கொட்டிய இரத்தத்தை உறிஞ்சி நீ குடிக்கிறாய்
உணர்கிறேன் வலியை
உன் காதல் தீயின் வெம்மையை
எல்லைக்குள் வந்துவிடாமல்
நீ வளர்த்த தீச்சுவர்
என்னை பிரிந்த
உன் கோரத் தவிப்பில்
என்னையே கொன்று
நீறு பூசும் அசுர நிலை
கிட்ட வந்து காதல் சொல்ல
உன் கால் இடுக்குகளுக்குள்
நசிந்து போகும் என் தேகம்
போர் போர் போர்
தடதகிட தாண்டவம் ஆடும் உன் உணர்வலைகள்
உன் கழுத்துவரை சுற்றிய நாகங்களாக
அடங்காத தாடகையின் அன்பு புதல்வி
எடுத்த காதல் விஸ்வரூபம் கண்டு கலங்கி விட்டேன்
ராவணன் மைத்துனன் நான்.
தேருக்கும் காற்றுக்கும் காத்திருந்து
அன்னத்தையும் புறாவையும்
தூதுவிட்ட அந்நாளிலும்
பஸ்க்கு காத்திருந்து
மதகு தேய்ந்து போன முன்னாளிலும்
காணொளியோ
சொல் மொழியோ
அற்ற அருவ நிலையில்
உருவம் தரு
இலத்திரன்களின்
உதிரத்தில் நீ
தீட்டி தீட்டி மார்பு செருக்கும்
போர் வாளிலும்
காதல் கொடும் போரின்
இழப்புக்கள் என்றும் ஒன்று தான்
வேலிகளை தாண்டாமல் வேள்வியை கெடுப்ப தெப்படி
ஆட்டிலறி பூட்டி எல்லை தாண்டி அடிக்கட்டோ
அருகில் வந்து அன்புரைதால் அடங்காத பிடாரியடீ
தூர நின்று தொட்டிட தோகையல்ல உன் தேகத் தீ
ஊடு பிரித்து
உன் துகில் கிழித்து
பல்குழல்கள் பூட்டி
மன்மத பாணம் எய்து
பாவி உன்
காதல் பிரமாண்டம்
கண்டு வியந்து
கந்தர்வங் கொண்டு
கொடுங் காமம் செய்து
மூடவந்த விரகத் தீயை
வேலிகளில் சூடிவிட்டு
வீட்டு நடுவில்
விஸ்வரூபமெடுத்து நிற்கும்
காதல் குவேனி
உன் காதலை
பிளந்து போட்டு இறந்து கிட
விடியும் பொழுதுகளில்
விஜயன் எனது
புணர்வுகள் ஒவ்வொன்றும்
புலிகளையும் சிங்கங்களையும்
பிரசவிக்கும்
போர் போர் போர்
Monday, 1 March 2010
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment